Tuesday, December 22, 2009

நிழலுடன் நிஜம்

மஞ்சள் நிறத்தில் மிகச் சிறிய தேன் சிட்டுக்கள் இரண்டு மூன்று வாரங்களாக வீட்டின் பின்புறம் கண்ணாடி பார்த்துப் பார்த்துக் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன. அவை துணி காயப்போடும் கம்பியில் எப்போதும் வாகாக உட்கார்ந்து கொண்டு கண்ணாடி பார்த்துக் கொண்டு இருந்தன.

இறகுகளை விரித்து அழகு பார்த்துக்கொண்டும் அலுத்துப் போய் திரும்பிக் கொண்டும் மீண்டும் கண்ணாடியைக் கொத்தி விளையாடிக் கொண்டும் அநியாயத்துக்கு சத்தமிட்டுக் கொண்டும் இருந்ததை தினமும் ரசித்துக் கொண்டிருந்தோம்.

இரண்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் அவற்றில் ஆண்சிட்டு பெண்சிட்டை விட அடர் மஞ்சளில் தலையில் சற்று அழுத்தமான கருப்பு நிறத்துடன் இருந்தது. எனவே இரண்டுக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.

ஆண்சிட்டும் பெண்சிட்டும் கண்ணாடி பார்த்துக் கொள்ளும் போது ‘அருகில் துணையை வைத்துக் கொண்டு ஏன் இப்படி நிழலுக்கு ஆசைப்படுகின்றன? பேசாமல் கண்ணாடியைக் கழற்றிவிடுவோமா’ என்று கூடத் தோன்றியது.

தோழியும் அவ்வப்போது வந்து அவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தாள். அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் “எனக்கென்னவோ இது சரியாப்படலை.. உள்ளே இருக்குற ஜோடிக்கு ஆசைப்பட்டு இது இரண்டும் பிரிஞ்சுறப் போகுது பாரேன்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவள் சொன்னது போலவே நடந்துவிட்டதோ? இந்த வாரம் ஆண் சிட்டுமட்டும்தான் வருகிறது. தானாக வந்து கண்ணாடியில் பார்த்துக் கத்திக் கொண்டு இருக்கிறது.

நிஜமாகவே நிழலுக்கு ஆசைப்பட்டு ஜோடியைப் பிரிந்து விட்டதா அல்லது அதன் துணை இறந்துவிட்டதா எனத் தெரியவில்லை. ஹூம்.... இப்போது கண்ணாடியைக் கழற்றி வைக்க வேண்டுமா? அல்லது அதையாவது பார்த்துக் கொள்ளட்டும் என அப்படியே விட்டு விட வேண்டுமா?
சுநந்தா