Monday, September 14, 2009

இன்னொரு பட்டாம்பூச்சி

முட்புதருக்குள் மாட்டிய பட்டாம்பூச்சி
இறக்கை விரித்த போதெல்லாம்
முள் பட்டது
முள்ளை விலக்கி விலக்கி
சிறகைப் பற்றி வெளியே
தூக்கினேன் மெல்ல.
'காப்பாற்றியதாக நினைக்காதே
முட்புதரிலிருந்து நானாக மீளும்
அனுபவம் இழந்தேன் உன்னால்.
சுயமுயற்சியைக் கெடுத்த உன்னை
மிக மிக வெறுக்கிறேன்"
சினத்தோடு பறந்து சென்றது.


சுநந்தா

Friday, September 11, 2009

என் நிலையை உன்னில் தேடி..

"என் இடம் எது? உன் வாழ்வில் எனக்கான இடம் எது?" என எப்போதும் தேடும் மனது. ஒவ்வொரு உறவிலும் பாசத்திலும் நேசத்திலும் வெறுப்பிலும் கசப்பிலும் மனது இதைத்தான் யோசிக்கிறது.

என் மேல் அன்பு செலுத்துகிறாயா? நீயா? ஓ அப்படியா? எதுவரை தாங்குவாய்? நான் உன்னை இவ்வளவு இம்சித்தாலும் பிரியாமல் இருப்பாயா? உண்மையாகவா? சோதித்துத் தெரிந்து கொள்கிறேன்..

ஓஒ அடடா உண்மைதான் அவ்வளவு தாங்கி விட்டாயா? ஆகா பாசக்காரன் தான் நீ. ஆனால் ஆனால் அதுதான் உன் எல்லையா அல்லது இன்னும் இம்சையைத் தாங்குவாயா? இரு.. இன்னும் என் எல்லையை விரிவாக்கிச் சோதிக்கிறேன்.. இப்படித்தான் மனம் அலைகிறது.

நானும் நீயும் எதிரியா? சரி எனின் உன் வாழ்வில் நான் எத்தகைய எதிரி? என் இடம் எது. நான் உனக்கான முழு நேர எதிரியா? அல்லது நீ என் முழு நேர எதிரியா? நமது இடத்தைக் குறித்துக் கொள்வோம்.

உன் வாழ்க்கையில் எனக்கான இடம் எது? எனக்காஆஆஆஆன இடம்?
அதை எப்படி நான் அறிந்து கொள்வது?
அது நான் உன்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையிலும் நீ விட்டுக் கொடுக்கும் அளவிலும் அது எனக்கான இடமாகிறதோ?

ஒரு பிறந்த குழந்தை கூட அதன் இடம் என்ன என சோதிக்கிறதே. அழுது ஆர்ப்பாட்டம் செய்து பார்த்து "ம்ம் நம்மைக் கவனிக்கிறார்கள்" அல்லது "ஐயோ நம்மைக் கவனிப்பார் இல்லையே" என அறிந்து கொள்கிறது.
சே என்ன புத்தி இது.

உன்னை அல்லது உங்களை அல்லது அதை அல்லது அவைகளை வைத்து என் நிலையை நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
என் நிலை என்பது எப்போதுமே உன்னை அல்லது வேறொன்றைச் சார்ந்ததா? வேறொன்றை மட்டுமே சார்ந்ததா? குழப்பம்.

எல்லாவற்றுக்கும் காரணம்?
மனதில் எண்ணங்களால் ஏற்பட்ட இடநெருக்கடியா? என் மனதின் ஓரம் சாரம் என எல்லா இடங்களையும் காலி செய்ய வேண்டுமோ? குப்பைத் தொட்டிகளிலேதான் குப்பைகள். சுத்தமாக தெளிவாகத் துடைத்துப் பளிங்குபோல் வைத்தால்?

எதையும் இனி நீயாக நிரப்பாதே காலியாக வைத்திரு போதும்.
சுத்தமான இடங்கள் அற்புதமானவைகளால் நிரப்பப்படும்.


சுநந்தா
 ____________

Wednesday, September 9, 2009

வீட்டில் வளர்த்த பறவை

சிறகுகளை வீசிப்பறக்க
நினைத்தபோதெல்லாம்
வெட்டப்பட்ட சிறகுகள்
கண் முன் பறந்தது போலும்..
அடைத்துப் போடாமலே
அடைந்து கிடந்தது
சிறகிருந்தால் பறக்கலாம்
எனத் தெரியாமல்
சிறகு வளர்ந்த பின்னும்.

சுநந்தா

Monday, September 7, 2009

மாற்றம்

வழுக்கிக் கொண்டு நிதம் எழும் சூரியன் போல எவ்வளவு இயல்பாக சுலபமாக மனிதர்களின் நிறம் மாறுகிறது! எவ்வளவு மாற்றங்கள்!!
உன்னுடய மாற்றம் என்னையும் மற்றவரையும் சேர்த்துப் பாதிக்கும்
என்பதும் அது அடுத்ததையும் மற்றவைகளையும் பாதிக்கும் என்பதும் உனக்குத் தெரியாதா? அல்லது தெரிந்தும் எதும் செய்ய இயலாத நிலைமையா? 


உன்னை சொல்லி என்ன செய்ய? உன்னுடைய மாற்றமே உனக்கு அப்படி வேறொன்றினால் ஏற்பட்ட மாற்றம் காரணமானதாகத்தான் இருக்க வேண்டும். சின்னக் கல் விழுந்த குளம் கூட இயல்பில்
மாறிப்போய் விடுகிறதே. நாடகத்தில் காட்சிகள் மாறுவது கூட ஒரு திட்டமிட்ட ஒழுங்கான அமைப்பில்.. ஆனால் வாழ்க்கையோ
சரசர என ஓடிப் பொலபொலவெனக் கொட்டிக்கொண்டே இருக்கும் அருவி போல மாற்றங்கள் மட்டுமே நிறைந்த கணங்களுடன்..


காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும் இந்தக்கணத்தில் ஏற்கனவே நடந்தவைகளுக்கு அருகாமையிலாவது ஒரு காட்சி அமையட்டுமென எதிர்பார்த்துக்கொண்டு..
சுநந்தா

Wednesday, September 2, 2009

மயக்கம்

வளைந்து ஆடிய பாம்பின்
அழகில் மகுடிக்காரன்
மயங்கி விழுந்தான்

பாம்பு அவனைப்
பொட்டலமாகச் சுருட்டி எடுத்துச்
சென்றது வளைக்குள்

கண் திறந்து பார்த்தவனைப்
பாம்பு மெல்ல முத்தமிட
பாம்பாட்டி நீலமானான்

திக்கித் திணறிக் கைகூப்பி
கடவுளிடம் கத்தினான்
'மன்னித்திடு இவ்வழகிய பாம்பை'.
சுநந்தா