Saturday, July 31, 2010

சொல்லிக்கொடுக்கப்பட்டது 4

சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய்
வாசலில் இறங்கும் போதிருந்து
கல்லூரி வரை மொய்க்கும் கண்களும்
கற்றைகற்றையாய் வரும்
காதல் கடிதங்களும்
'நீ மறுத்தால் என்னுயிர் பிரியும்'
எனும் வசனங்களும்
அவளைத் திணறடித்தாலும்
கல்யாணப் பேச்சை ஆரம்பித்தவுடன்
அந்தக் கூட்டம் மாயமாய் மறைந்ததால்

அவளுக்கு ஒரு விஷயம்
சொல்லிக்கொடுக்கப்பட்டது.
சுநந்தா

சொல்லிக்கொடுக்கப்பட்டது 3

வறண்டு விரிந்த பாலையில்
வெகு சில மழைத்துளிகள் எதற்காக?
சிறகொடிந்த தனிப் பறவையின் முன்

தானியச் சிதறல்கள் எதற்காக?
இப்படி ஏதேதோ நினைத்துக்கொண்டு
கவிழ்ந்து கவலையில் ஆழ்ந்திருந்தேன்
'உனக்கு வந்த தாங்கமுடியாத துன்பம் எது?'
கேட்டவரை வியப்புடன் பார்த்தேன்
'என் குடும்பத்தினரை விபத்தில் இழந்தது..' என்றபோது
இழந்தும் நீ வாழ்கிறாய்தானே? என்றார்
'உயிர் நட்புகளைப் பிரிந்தது?' கேட்டதும்
'அப்படியும் உன் உயிர் இருக்கிறதே?' என்றார்
'நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டபோது?' என்றேன்
அவற்றையும் தாங்கிக்கொண்டாய்தானே? என்றார்
ஒருவேளை விரிவான பார்வையை எதிர்பார்க்கிறாரோ
என்று 'மக்களின் பசி வறுமை போட்டி பொறாமை
ஏற்றதாழ்வு காணும் போது' என்றேன்
பதிலின்றி சிரித்துக் கொண்டார்
இப்போது எனக்கும் சந்தேகம் வந்தது
'கடும் நோயில் உழன்றேனென்றால்
என்னால் தாங்க முடியாதோ?' என்றேன்
அப்போதும் நீ போராடுவாய்தானே என்றார்
'அப்படியென்றால் எனக்குத் தாங்க முடியாத
துன்பமெது?' அவரிடமே கேட்டேன்
மெல்லச் சொன்னார் 'இதுவரை உனக்கு
அப்படிப்பட்ட துன்பம் வரவில்லை
தாங்க முடியாத துன்பம்
வரும் போது உனக்கு மரணம் வந்திடும்'.
இப்படி எல்லாம் எனக்குச்
சொல்லிக்கொடுக்கப்பட்டது.
சுநந்தா