Friday, January 15, 2010

கிளி ஜோசியம்

வாசலில் கிளி ஜோசியக்காரன். அவனைச் சுற்றிக் கூட்டம். அவன் கிளியிடம் சீட்டை எடுத்துப் போடச்சொல்லிக் கொண்டே கையை ஆட்டிக் கொண்டிருக்க கிளி தலையைச்சாய்த்து அவனது விரல்களைக் கவனித்தவாறு சீட்டுக்களை மேலும் மேலும் எடுத்துப்போட்டுக் கொண்டு இருந்தது.

பாட்டி “கையை ஆட்டாமல் இருய்யா.. அது எதை வேணும்னாலும் எடுக்கட்டும்” எனச் சொல்லிக் கொண்டே இருக்க அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவனுக்குத் திருப்தியான (ஆட்களை எடை போட்டு அவர்களுக்கு ஏற்றார் போல சொல்ல) சீட்டு வரும் போது மட்டும் சைகை செய்ய கிளி அவனிடம் கொண்டுவந்து போட்டுவிட்டு சமர்த்தாக கூண்டுக்குள் சென்றது.

கூட்டத்தில் அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஜோசியம் பார்க்கச் சொல்ல இது போலவே தொடர்ந்து ஜோசியக்காரனும் கிளியும் நடந்து கொண்டார்கள். ஆனாலும் அனைவரும் தொடர்ந்து சிரிப்புடனும் அக்கரையுடனும் பயத்துடனும் சுவாரசியத்துடனும் அவரவர் எதிர்காலம் பற்றி கிளி ஜோசியக்காரனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.


சுநந்தா.