Friday, October 30, 2009

சந்தேகமாக

புன்சிரிப்பு உதட்டில் பூசி

கண்களில் பொய்க் கனிவுதீட்டி

மனதையும் மனிதத்தையும்

கழட்டி வைத்துவிட்டு

வெளியில் கிளம்புகிறேன்

வழியில் என்னைச்

சந்திப்பவர்களின் இதயமும்

அவர்களின் கைப்பைகளுக்குள்

மறைந்துள்ளதோ

என சந்தேகம் வருகிறது.


சுநந்தா.

Tuesday, October 27, 2009

நானும் சேர்ந்து..

எங்கும் தெறித்துச் சிதறியபடியும்

எல்லாம் நிறைந்து வழிந்தபடியுமாயுள்ள

உன்நினைவுகளை எல்லாம் அள்ளி அள்ளிச்

சேகரித்து தாவியும் நழுவியும்

ஓடியவற்றையெல்லாம் மீண்டும் ஓடிப்பிடித்து

ஒருவழியாய் மூட்டையாகக்கட்டி

சுமக்கவியலாமல் சுமந்து சென்று

நடுக்கடலில் தூக்கியெரிந்துவிட்டேன்

மூழ்கியது மூட்டையும் நானும்தான்.
சுநந்தா

Thursday, October 8, 2009

மனமூடி..

அறிமுகப் புன்னகை பார்த்தால்
இறுகிக் கொள்ளும் முகம்
யாரைப்பார்த்தும் எதைப்பார்த்தும்
விலகித் தனித்துச் செல்லும் நடை

நீளும் கரம் கண்டால்
கொடுக்கவோ காக்கவோ
நெருங்கவோ நேரிடுமென
மூடிக்கொள்ளும் கரம்

கண்களைப் பார்த்தால்
கருணையோ காதலோ
கவிழ்த்துவிடுமென
கண் தவிர்க்கும் கண்கள்

இத்தனையும் என்னிடத்தில்
இயல்பாகக்கொண்ட நான்
எல்லோரிடமும் புன்னகைத்துக்
கைப்பற்றிக் கண்பார்த்துப் பேசுகிறேன்

மித்ரா

மறக்கமுடியாமல்..

சின்னப்பூனைக்குட்டி மெளனமாக மடியில்
விரிந்த கண்களும் சின்ன முகமும்,
மென்மையான உடம்பும் பஞ்சுப்பாதமும்
என் விரல் தடவும் போது
வளைந்து கொடுக்கும் பரிவும்
எதையோ நினைக்கவைக்க
மடியிலிருந்து இறக்கி விட்டு
'ஓடிப்போ எல்லாம் வேஷம்"
என விரட்டி விட்டேன்.
 
சுநந்தா.