Friday, November 27, 2009

ஒளியில் விழுந்து..

விளக்கில் போய் விழும்
விட்டில் பூச்சியாய்
ஒளியில் விழுந்து
விழுந்து சாகிறாய்.
விதி எனச் சொல்லி
மனது தேற்றி மீண்டும்
மீண்டும் சாகாமல்
ஏதோ திசையில்
இருளாக இருப்பினும்
பறந்து பார்த்தால்
பாதை அறியலாம்.


சுநந்தா

Wednesday, November 25, 2009

மெளனமொழி போதும்

உன்னைக் குதறிவிட்டு வலியோடு
அமர்ந்திருக்கிறேன்
பேசாமலே இருந்து விடலாம் என்றும்
பேச்சுகளற்ற மெளனத்துடன்
அருகிருந்தால் போதுமென்றும்
அதைவிட பேசாமல் பார்க்காமல்
இருப்பை உணர்த்த வேறுவழி
இருந்தால் நல்லது என்றும்
நினைத்துக் கொண்டு
நீயும் ஏறக்குறைய எனது
மனநிலையில்தான்
என்னுடன் பேசுமுன்
இருந்தாய் எனத் தெரியும்
அப்படியும் பேசியதால்
உன்னைக் குதறிவிட்டு வலியோடு
அமர்ந்திருக்கிறேன்

 

சுநந்தா

Sunday, November 22, 2009

ஒரு ஓவியம்

அந்த ஓவியன் வரைந்துகொண்டு இருந்தான்
அப்படிச் செய்யாதே இப்படிச்செய்யாதே
எனக் கூறிக்கொண்டே இருந்த
முதியவர்களையும்
மீண்டும் மீண்டும் அப்படியும் இப்படியும்
செய்துகொண்டே இருந்த
சிறுவர்களையும்
அப்படி வரையாதே இப்படி வரையாதே என
அவனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த
சிறுமியையும்.

சுநந்தா

Wednesday, November 18, 2009

உன்னுடனானது..

மயிலிறகினால்
வானவில்லில் மை எடுத்து
அடர்நீலத்தில் அதிகம் தோய்த்து
பூவிதழில் எழுதிய
மெல்லிய
நேசமும் அதுதான்

சரியாகத் திட்டமிட்டுச்
சிதறிட்ட ஓவியமாய்
கருஞ்சிவப்பாய்
நொருக்கி அழித்த சிற்பமாய்
கனவிலும் வலிக்கின்ற
துரோகமும் அதுதான்
சுநந்தா

Sunday, November 8, 2009

பூனைக்குட்டி

மழையில் நனைந்த
குட்டிப்பூனை
இரண்டு நாட்கள் வீட்டு
விருந்தாளாகியது.
மழை நின்று
வெயில் வந்ததும்
வீட்டுக்கதவுகள்
திறந்தே இருப்பதால் வீட்டு
உறுப்பினராகியது.


சுநந்தா

Friday, November 6, 2009

மறந்து மன்னித்திட

கடந்திட்ட நிகழ்வுகளை
மன்னித்திட மறந்திடவும்
மறந்திட மன்னித்திடவும்
வேண்டுமென அறிவு
அறிவித்தாலும்
செயல்படுத்திடத் திடமின்றி
மறந்தும் மன்னிக்காது
மன்னித்தும் மறக்காது
மனது உடைகிறது

உடையட்டும் என்று
விட்டுவிட்டு விலகி நின்று
கவனித்துப் பார்த்து வந்தால்
ஒருவேளை
மறப்பதற்கோ
மன்னிப்பதற்கோ
எதுவுமே நடக்கவில்லை
என்றுகூட மனம்
உணரக்கூடும்.


சுநந்தா.

Tuesday, November 3, 2009

உன் விழித்துளி..

ஒரு துளி மெதுவாக
மிக மெதுவாக
கண் ஓரத்தில் சேர்ந்து
உருண்டு வடியத் துவங்கி
தன்னைப் பார்த்த விழியில்
நீர் விரைந்து நிறைவது
கண்டு மெல்ல யோசித்து
கன்னத்திலேயே
காய்ந்து விட்டது


சுநந்தா

Monday, November 2, 2009

ரசித்தபோது..

வரிசை வரிசையாய்
அமர்ந்து சினிமா பார்த்தவாறு
கோபப்பட்டு வருத்தப்பட்டு
சந்தோஷப்பட்டு எரிச்சல்பட்டு
துக்கப்பட்டு விதவிதமாக
எல்லாம் பட்டுக்கொண்டு
இருப்பவர்களை படம்
முடியும்வரை ரசித்து ஒரு
திரைப்படமெடுக்க வேண்டும்.


சுநந்தா

Sunday, November 1, 2009

சுயநலம்

நெருக்கமான உறவுகளை
நொறுக்கி
தீயாய் வார்த்தைகளில்
பொசுக்கி
அன்பான அணைப்பை
விலக்கி
ஆதரவுக் கரங்களை
ஒதுக்கி
வாழச் சொல்லிக்கொள்ளும் காரணம்
விரக்தி.


சுநந்தா