Wednesday, June 23, 2010

சொல்லிக் கொடுக்கப்பட்டது 2

'சுனாமி' தலைப்பில் படம் வரைந்து தரச் சொன்னாராம் ஆசிரியர்.
காலையில் இருந்து யோசித்துக் கொண்டு இருந்தாள்
'கடலுக்கு அந்த நிறம் அடிக்கவா? இந்த நிறம் அடிக்கவா?
கடலை அசுரன் போலக் காட்டவா?' எனக் கேள்விகள்
'அந்தமான்' சித்தியிடம் தொலைபேசச் சொன்னேன்
சுனாமி பற்றி உண்மைப் படத்தைத் தெரிந்து கொள்ளட்டும் என
பேசி முடித்துவிட்டுக் கதறி அழுது கொண்டு இருக்கிறாள்
திக்கித் திணறி "எங்க டீச்சரிடம் என்னால் வரைய முடியாது
என சொல்லி எழுதிக் கொடுங்கள்" எனச் சொல்லிவிட்டு
இன்னும் அழுது கொண்டு இருக்கிறாள்
சித்தியிடம் கேட்டேன் என்ன சொன்னபோது உடைந்தாள் என
என்னிடம் அவர் ஏற்கனவே சொன்னதுதான்...
'எத்தனையோ பேர் கடலிடம் தப்பி ஓடிக்கொண்டு இருந்தபோது
ஒரு தந்தை மகளை இழுத்துக் கொண்டு ஓடினாராம்.
அவர் திரும்பிப் பார்த்தபோது அவரது கையில்
கை மட்டும் இருந்ததாம்'.


 சுநந்தா

Wednesday, June 2, 2010

சொல்லிக்கொடுக்கப்பட்டது. 1

அடுக்கிவைக்கப்பட்ட சீட்டுக் கட்டுக் கோபுரத்தை
மகள் அதிசயமாகப் பார்க்க அவள் அழகாகக் கட்டினாள்
கட்டி முடித்துக் கைதட்டி மகிழ்ந்தார்கள்
சிறுமிக்குப் பொறுமையும் கவனமும் சொல்லிக்கொடுக்கப்பட்டது
பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒடிவந்து சரேலெனத்தட்டிவிட்டான்
பொலபொலவென விழுந்தது மாளிகை
கலைக்கும் யாரையும் அவளுக்குப் பிடிப்பதில்லை
சின்னக் குழந்தையாயினும் பெரியவராயினும்.
அப்படியே அவனை அமரவைத்து
“எழுந்து போனால் பின்னிவிடுவேன்” என மிரட்டி
அதைவிடப் பெரிய மாளிகையை
அவனைப் பார்க்கவைத்துக்கொண்டே கட்டினாள்.
“இதையும் நீ உடைத்தால் காலைவரை இங்கேதான்
உட்கார்ந்திருக்க வேண்டும் இதை விடப் பெரிதாகக்
கட்டிக்கொண்டு இருப்பேன்” என்றாள்.
சிறுவன் கட்டி முடிக்கப்பட்டதைக் கவனமாகப் பார்த்து
இரண்டடி எச்சரிக்கையுடன் பின்னால் சென்று
மெதுவாகக் கதவு திறந்து வெளியேறினான்
இப்போதும் சிறுமிக்கு
ஏதோ ஒன்று தெளிவாகச் சொல்லிக்கொடுக்கப்பட்டது.

சுநந்தா