Monday, August 30, 2010

பட்சியும் பாம்பும்

கொட்டிய மழை வெள்ளத்தில்
அதல
பாதாளத்தில் மாட்டின
அவளதுசெல்லப்
பிராணிகளான
சின்னப்
பட்சியும் பாம்புக்குட்டியும்.
மெல்லக்
கவிழ்ந்து
கண்சுருக்கிப்
பார்த்தபோது
உடலெல்லாம் சிராய்ப்பாக ரத்தம் வழியக்
கிடைத்ததைப்பற்றி
ஏறும் பாம்பும்
எழமுடியாது
என முடிவெடுத்துக்
கண்மூடிப்
படுத்திருந்த பட்சியும்....
உதடுசுழித்துக்
கவலைப்பட்டு
மிகமிகச்
சிரமப்பட்டு
வெளியிலெடுத்தாள்
பட்சியை.
அதற்குள்
தானாகவே மேலேறிய
குட்டிப் பாம்பைத் திரும்பிப் பார்த்தாள்.
மெல்ல அதைக் கையிலெடுத்து
அன்பு முத்தமொன்று இட்டு
"காத்திரு" எனச்சொல்லிக் குழியில்வீசிப்
பட்சியுடன் பறந்து விட்டாள்மீண்டும் குழியில் விழுந்தபாம்பு
அவளது
செய்கையால் அதிர்ந்துபோய்
அப்படியே
செத்தது.
சுநந்தா

Tuesday, August 10, 2010

தன்னிரக்கம்

கையைப் பற்றியபடி ஓடி வந்துகொண்டிருந்த
என்னைக் கூட்டத்தில் உதறிவிட்டு நமக்கிடையில்
இடைவெளி விட்டுத் தூரத்தில் நடக்கிறாய்.
எப்படியும் இந்தப் பாதையில் நடந்து விடுவேன்
எனும் நம்பிக்கையும் உனக்கு உள்ளது போலும்..
அவ்வப் போது திரும்பிப் பார்த்து வருகிறேனா எனக்
கவனத்துடன் உன் கண்கள் என்னைப் பார்க்கின்றன.
அய்யோ என்னால் முடியவில்லை எனக்
குரல் கொடுத்தால் நிற்பாய் நீ எனக்குத் தெரியும்
ஆனால் நான் மாட்டேன்.
உடைந்த காலும் நொருங்கிய நெஞ்சும்
ரணமான இதயமும் கதறச் சொன்னாலும்
திரும்பிப் பார்க்கும் உன் கண்களிடம்
என் கண்கள் மட்டும் "நான் நலம் நீ நட"
என இனி எப்போதும் பொய்யாகச் சிரிக்கும்
கையைப் பற்றியபடி ஓடி வந்துகொண்டிருந்த
என்னைக் கூட்டத்தில் உதறிவிட்டு நமக்கிடையில்
இடைவெளி விட்டுத் தூரத்தில் நடந்து செல்லுமுன்
யோசித்திருக்க வேண்டும் நீ.
சுநந்தா

Thursday, August 5, 2010

பாறை

உடைக்கிறான் அழகான முழுமையான கல்லை
உளியைவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக
உருவம் தருகிறானாம் உயிர் தருகிறானாம்
வலியில் கதறும் கல்லைப் பொருட்படுத்தாமல்
கலைஞனாம்.. சிற்பியாம்.

நான் செதுக்கி முடித்ததும் உன்னைக்
கண்டு ஊரே வியக்கும் அழுது கரையாதே
எனச் சொல்லித்தொடர்ந்து செதுக்குகிறான்
பாறை அழிந்து சிற்பமான பின்னர்
பெருமைப்பட்டுக் கொள்ள பாறைக்கென்ன இருக்கும்?
சுநந்தா