Sunday, July 10, 2011

முடிவோ ஆரம்பமோ வேண்டும்.

கடவுளே எனக்கொரு வழிகாட்டு
ஏதேனும் ஒரு ஆரம்பமோ  அல்லது
முடிவையோ கொடுத்துவிடேன்
இந்தப் பயணம் இலக்கில்லாமல்
எங்கோ செல்வது சலிப்பாயிருக்கிறது
கடுஞ்சுமையாயிருக்கிறது
பாரஞ்சுமந்து செல்லும்போது 
பேச்சுத் துணைக்கு வருவோரும்
அறிவுரை அள்ளித் தெளிப்போரும்
அலுத்து அயர வைக்கிறார்கள்
 தெரிந்தவர்களை அந்நியராகப் பார்ப்பதும்
தெரிந்தும் தெரியாதவர்களைப் போல்
நடந்து கொள்பவர்களை ஏக்கத்துடன் பார்ப்பதும்
எனது வழக்கமாகி இருக்கிறது.
அய்யோ பாவம் எனப் பரிவோடு
வருவோரைஆத்திரத்துடன் பார்க்கிறேன்
யாராலும் உதவ முடியாது..
நன்றாகத் தெரிகிறது.
சுமை இறக்க முடியவில்லை..
சென்று சேருமிடம் தெரியவில்லை
இந்தக் கொழுத்தும் வெயிலில்
சூரியனுக்கு அடியில்
மெதுவாக மூச்சிழுத்து
ஆழமாக உள்ளடக்கி
மூட்டையோடும் வலியோடும்
நடந்தே ஆகவேண்டுமாம்.

சுநந்தா