Friday, September 11, 2009

என் நிலையை உன்னில் தேடி..

"என் இடம் எது? உன் வாழ்வில் எனக்கான இடம் எது?" என எப்போதும் தேடும் மனது. ஒவ்வொரு உறவிலும் பாசத்திலும் நேசத்திலும் வெறுப்பிலும் கசப்பிலும் மனது இதைத்தான் யோசிக்கிறது.

என் மேல் அன்பு செலுத்துகிறாயா? நீயா? ஓ அப்படியா? எதுவரை தாங்குவாய்? நான் உன்னை இவ்வளவு இம்சித்தாலும் பிரியாமல் இருப்பாயா? உண்மையாகவா? சோதித்துத் தெரிந்து கொள்கிறேன்..

ஓஒ அடடா உண்மைதான் அவ்வளவு தாங்கி விட்டாயா? ஆகா பாசக்காரன் தான் நீ. ஆனால் ஆனால் அதுதான் உன் எல்லையா அல்லது இன்னும் இம்சையைத் தாங்குவாயா? இரு.. இன்னும் என் எல்லையை விரிவாக்கிச் சோதிக்கிறேன்.. இப்படித்தான் மனம் அலைகிறது.

நானும் நீயும் எதிரியா? சரி எனின் உன் வாழ்வில் நான் எத்தகைய எதிரி? என் இடம் எது. நான் உனக்கான முழு நேர எதிரியா? அல்லது நீ என் முழு நேர எதிரியா? நமது இடத்தைக் குறித்துக் கொள்வோம்.

உன் வாழ்க்கையில் எனக்கான இடம் எது? எனக்காஆஆஆஆன இடம்?
அதை எப்படி நான் அறிந்து கொள்வது?
அது நான் உன்னிடம் எடுத்துக் கொள்ளும் உரிமையிலும் நீ விட்டுக் கொடுக்கும் அளவிலும் அது எனக்கான இடமாகிறதோ?

ஒரு பிறந்த குழந்தை கூட அதன் இடம் என்ன என சோதிக்கிறதே. அழுது ஆர்ப்பாட்டம் செய்து பார்த்து "ம்ம் நம்மைக் கவனிக்கிறார்கள்" அல்லது "ஐயோ நம்மைக் கவனிப்பார் இல்லையே" என அறிந்து கொள்கிறது.
சே என்ன புத்தி இது.

உன்னை அல்லது உங்களை அல்லது அதை அல்லது அவைகளை வைத்து என் நிலையை நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
என் நிலை என்பது எப்போதுமே உன்னை அல்லது வேறொன்றைச் சார்ந்ததா? வேறொன்றை மட்டுமே சார்ந்ததா? குழப்பம்.

எல்லாவற்றுக்கும் காரணம்?
மனதில் எண்ணங்களால் ஏற்பட்ட இடநெருக்கடியா? என் மனதின் ஓரம் சாரம் என எல்லா இடங்களையும் காலி செய்ய வேண்டுமோ? குப்பைத் தொட்டிகளிலேதான் குப்பைகள். சுத்தமாக தெளிவாகத் துடைத்துப் பளிங்குபோல் வைத்தால்?

எதையும் இனி நீயாக நிரப்பாதே காலியாக வைத்திரு போதும்.
சுத்தமான இடங்கள் அற்புதமானவைகளால் நிரப்பப்படும்.


சுநந்தா
 ____________

No comments:

Post a Comment