Saturday, February 20, 2010

முற்றுப் புள்ளிக்கருகில்..

“முற்றுப் புள்ளி அருகில் நீயும் மீண்டும் சிறு புள்ளியை வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே…” என்ற பாடல் வரி பேருந்தில் பாடிக்கொண்டு இருக்கிறது. இந்த இரவு முழுதும் பயணம் செய்ய மட்டுமே போகிறோம் என உணர்ந்து நல்ல பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டு இருக்கும் போது இந்த வரி மிகஅழகாகத்தான் இருக்கிறது.

ஆனால் நாளை இந்தப் பயணம் முடிந்து விடும். இந்த இரவின் அழகும் அதனுடன் முடியும். அதனால் தானோ என்னவோ இந்த இனிமையை நாம் நினைத்தால் தொடர வைக்க முடியும் என நம்மை ஏமாற்றிக் கொள்வது ஒரு சுகம்.

எல்லா முற்றுப் புள்ளிகளையும் அதுபோலத் தொடர்களாக மாற்றிவிட்டால்..? முடிவின் அழகே போய்விடுமே? எதுவுமே முடியாதே! நினைக்கவே அலுப்பாக இருக்கிறது. புள்ளிகளற்ற நீளமான சொற்குவியல்கள் அல்லது முடிவற்ற பயணங்கள் அல்லது நிறுத்தாத பேச்சுகள் அல்லது தொடர்ந்து கொண்டே இருக்கும் போராட்டங்கள் என எல்லாமே அயரவைக்கின்றன. முற்றுப்புள்ளிக்காக ஏங்க வைக்கின்றன.

ஒரு இனிய நட்புக்கதையோ, காதல்கதையோ, சிறுகதையோ, தொடர்கதையோ, குறுங்கவிதையோ, நாம் நம்மை மறந்து நெகிழ்ந்து நின்ற நிலையோ, தாங்க முடியாத வேதனையில் துடித்த கணமோ, வாழும் வாழ்வோ ஒரு புள்ளியில் முடிவடைவதால் மட்டும்தான் சுவாரசியமாக இருக்கிறது. முற்றுப்புள்ளிகளை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது எனத் தோன்றுகிறது.


-
சுநந்தா

No comments:

Post a Comment