எழுபதுகளில் பிறந்தவள்
நான்
விழுந்தேன் திருமணம் நடந்தபின்
அன்பு பண்பு பாசம்
நேசம் என
உறவுச் சூழ்நிலை விரித்த வலையில்
நிமிர்ந்து பார்க்குமுன் மூன்று குழந்தைகள்
ஆத்திகம் பேசி வளர்ந்த பெண் நான்
ஆத்திகம் பேசி வளர்ந்த பெண் நான்
அம்பிகையிடம் கதறி அழுகிறேன்
தன்மானம் அடையாளம்
அனைத்தும் இழந்து
அடிமையாகக் கையேந்திக்
கட்டிய கணவனிடம்
பிச்சையாகக் கேட்கிறேன்
வீட்டில் அமைதியை.
எக்காளமாகச் சிரிக்கிறான்
கூவுகிறான் கொக்கரிக்கிறான்
தன் காலடியில்
யாரும் விழுந்து காணாத அவனுக்கு
எனது கதறல் இனிப்பாக
இருக்கிறது
தன் முன் வைக்கப்பட்ட
படையலாக இருக்கிறது
ஆயிரம் சட்ட திட்டம்
வகுக்கிறான்
“அனைத்துக்கும்
அடங்கு அல்லது
கூட்டைக் கலைப்பேன்”
எனக் கூச்சல் இடுகிறான்
ஆயிற்று
அனைத்துக்கும்
ஆடியும் பாடியும் வாடியும் வதங்கியும்
அத்தனை இழுப்புக்கும்
போனது வாழ்க்கை
இறுதிச் சுற்று
நடக்கிறது
பெண்கள் வளர்ந்து வளர்ந்து விட்டனர்
இன்னும் சில வருடம் மூச்சை அடக்கினால்
இன்னும் சில வருடம் மூச்சை அடக்கினால்
“அவ கல்யாணம் செஞ்சு
வச்சுக் கடமைய முடிச்சுட்டா”
என யாரோ நால்வர்
பேசுவார்கள்
அதற்குள் மூச்சு
அடங்கிப் போனால்
“பாவி கடமையை முடிக்காம
போயி சேர்ந்துட்டா”
என சில சொற்கள்
உதிரும்
மூச்சை இழுத்துச் சுவாசிக்க விரும்பிப்
பிரிந்தால்?.....
மூச்சை இழுத்துச் சுவாசிக்க விரும்பிப்
பிரிந்தால்?.....
என்ன செய்யப் போகிறாய்
எழுபதுகளில் பிறந்தவளே?
அப்பா வளர்த்தெடுத்த
சுயம் எங்கே போனது?
ஐந்தாம் வகுப்பிலேயே
ஜெயகாந்தனைப் படித்து
வியந்து பாராட்டிய தெளிவு
எங்கே
ஜானகிராமனும் பாலகுமாரனும்
சுஜாதாவும் சிவசங்கரியும்
விதவிதமாகப் பயப்படத்தான்
சொல்லிக் கொடுத்தார்களா?
ஓஷோவும் ஈஷாவும்
ஜே.கேயும் புத்தாவும்
மக்காக்கி மந்தமாக்கி மடச்சியாக்கியா சென்றார்கள்?
இல்லை
எழுபதில் பிறந்ததுதான்
என் குற்றம்
கற்பனைகளில் வாழும்
முறையை
அனைவருமே திணித்துச்
சென்றனர்
ஓவெனக் கதறி அழுதுவிட்டு
அடுத்த நிமிடம்
கிளிக் கூண்டின்
அருகே நின்று உணவளித்து
உற்றுப் பார்த்துவிட்டு
வீட்டு வேலையைத் தொடர்கிறேன்
புரட்சியாவது புடலங்காயாவது?
எழுபதுகளில் பிறந்தவள்
நான்
குடும்பம் என்ற
மேடையிலே அவன் நல்ல கணவனாய் வேஷம்
போட நான் அவனுக்குக்
கொடுத்த கூலி ‘எனது வாழ்க்கை’
போகிறான் போ!
சுநந்தா
No comments:
Post a Comment