Thursday, September 20, 2018

எழுபதுகளில் பிறந்தவள் 3

எழுபதுகளில் பிறந்த பெண்கள் சாதுரியமானவர்களாகவும் பயந்தவர்களாகவும் இருந்தனர்.

அப்பெண்களின் வீட்டில் பெண்ணுக்கு வரதட்சணை பேரம் நடக்கும். அப்பாவின் முழு சேமிப்பையும் ஆண் மகனைப் பெற்றவர்கள் கேட்பார்கள். எதிர் காலக் கடனில்  மூழ்க வைக்கத் திட்டத்தை விலாவாரியாக சீர் செனத்தி எனக் கூறி பட்டியல் வைப்பார்கள்.    பெண் எதிர்த்துக் கேட்கமாட்டாள். அப்போது அடக்கமான பெண் என்று வேடமிட அவளுக்குத் தெரியும்.

ஒரு பெண் பள்ளியிலும் கல்லூரியிலும் பாரதியார் பற்றிய கட்டுரைகளை வரிந்து வரிந்து எழுதி வீரம் பேசி இருப்பாள்தோழிகளுடன் பெண் விடுதலை பேசித் தள்ளுவாள். ஆனால் வாயைத் திறக்க வேண்டிய இடத்தில் இறுகிக் கொள்வாள்.  பேசினால் பெண்ணை அடங்காதவளாய் வளர்த்ததாகப் பெற்றோரைச் சமூகம் பழிக்கும் என அவளுக்குத் தெரியும்.

சில பெண்கள் விரும்பியே வரதட்சணையை அனுமதித்தார்கள். என்  தந்தை பாசமாக எனக்குத் தானே கொடுக்கிறார். நான் புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் கேட்பதைக் கொடுத்து விட வேண்டும். அதற்கும் மேலே கூடக் கொடுக்கலாம் என யோசித்து வாயைத் திறக்க மாட்டாள்.

இன்னும் சில பெண்கள் திருமணத்துக்குத் தவமிருந்தார்கள்அனைத்து விரதங்களும் அனுஷ்டிக்கப்பட்டது. பெற்றவர்களிடம் இருந்து மீட்டுச் செல்லப்போகும் கணவனைப் பார்க்கும் முன்பே கடவுளாக வரித்துக் கொண்டார்கள்

இன்னும் சில பெண்கள் அனைவர் கண்ணிலும் மண்ணைத்தூவி ரகசியமாகக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள்அப்போது எல்லாம் காதலிப்பது மிகக் கடினமானது. “சுந்தரபாண்டியன்” படத்தைப் பார்த்தவுடன் என் தோழியிடம் சொன்னேன் “டைரக்டர் நிச்சயம் எழுபதுகளில் பிறந்தவன்” என. அக்காலக் காதல் மிகச் சரியாகச் சொல்லப்பட்டது.  ஆணும் பெண்ணும் இப்போது போலச் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்படாத காலம் அது.  

சமூகம் பொதுவாகக் காதலர்களைக் கல்யாணம் வரை செல்ல விட்டதில்லைகாதலின் போதே கசக்கிவிடும். அப்படியும் போராடி அல்லது வீட்டை விட்டு ஓடித் தாலியுடன் இருந்த இளம் பெண்களை  எழுபதுகளில் பிறந்தோர் வியப்புடன் பார்த்தனர்.

வெற்றிபெற்ற பெண்களாக மட்டும் காதல் திருமணம் முடித்தோர் கருதப்படவில்லை. அந்த ஆண் அவளைப் பணத்திற்காக விற்று விடுவான் என்றோ அல்லது விரைவில் கைவிட்டு விட்டு ஓடி விடுவான் என்றோ சிலர் அதீதமாகப் பயந்தனர். வீட்டில் உள்ள பெண்களையும் பயமுறுத்தினர்

 பாரதிராஜாக்களும் புரட்சிக் கல்யாணம் வரை மட்டுமே படம் எடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்களோ? சமூகம் வாழவிட்டதா என எழுபதுகளில் பிறந்தோருக்குத் தெரிந்ததில்லை. கற்பனைகளிலும் கனவுகளிலும் அதிகமாக வாழ்ந்த அந்தப் பெண்களின் மனதுகளில் 'பயம்' அழகாக வளர்க்கப்பட்டது.


   



 

No comments:

Post a Comment